தீப ஒளியில் ஜொலித்தது அயோத்தி நகரம்… (VIDEO)

5ஆம் தேதி நடக்க இருக்கும் ராமர் கோயில் பூமி பூஜைக்கு இப்போது இருந்தே நகரம் முழுவதும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிமயமாக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது .

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்துக்காக, நாளை பிற்பகல் 12.30 மணியளவில் பூமி பூஜை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, அயோத்தி விழாக்கோலம் பூண்டுள்ளது.

அப்பூஜையில், பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.

மேலும் பா.ஜனதா மூத்த தலைவர்கள் மற்றும் பல மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்க உள்ளார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

விழாவையொட்டி, அயோத்தி நகரமே விழாக்கோலம் கொண்டுள்ளது.

பூமி பூஜை நடக்க இருக்கும் தினத்தன்று விளக்கேற்றுவதற்காக சுமார் 1.25 லட்சம் விளக்குகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச மாநில வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நகரம் முழுவதும் விளக்குகள் ஏற்றப்பட்டு விட்டன.

அயோத்தியின் மிக முக்கிய சாலைகள், கோவில்கள், புனித தளங்கள் உட்பட நகரின் பெரும்பாலான பகுதிகளில் வண்ணமயமான விளக்குகள் ஒளிர வைக்கப்பட்டுள்ளன.

திரும்பும் இடமெங்கும் சுவர்களில் ராமரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

மேலும், விழா நடைபெறும் இடத்துக்கு அனைத்து தெய்வங்களையும் வரவேற்கும் விதமாக ராம்சரண் பூஜை நடைபெற்றது.

இந்த பூஜையில் பங்கேற்ற வேதவிற்பன்னர்கள், தெய்வங்களை வரவேற்கும் விதமாக வேதங்களை முழங்கினர்.

ராமர்கோயில் பூமி பூஜை விழாவுக்காக, பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் அயோத்திக்கு தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட செங்கற்கள் எடுத்து வரப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் சேலத்தை சேர்ந்த துறவிகள் சார்பில், 5 கிலோ எடை கொண்ட தங்க செங்கல், 20 கிலோ எடை கொண்ட வெள்ளி செங்கல் எடுத்து வரப்பட்டுள்ளது.

அயோத்தி நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாத வகையில், முக்கிய வீதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அயோத்தி முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே