கடந்த 15 ஆம் தேதி நம் நாட்டின் 74 ஆவது சுதந்திரதினத்தை ஒட்டி, பல இடங்களில் தேசியகொடி ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டது.
ஆண்டு தோறும் விமர்சையாக நடைபெறும் இந்த விழா, கொரோனா பாதிப்பின் காரணமாக எளிமையாகவே நடந்து முடிந்தது.
இந்த நிலையில் கும்மிடிபூண்டி அருகே தேசியக்கொடியை ஏற்ற பட்டியலின பஞ்சாயத்து தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி அருகே இருக்கும் ஆத்துப்பாக்கம் பகுதியின் பஞ்சாயத்து தலைவரை தேசியக் கொடி ஏற்ற விடாமல் பஞ்சாயத்து செயலாளரும் அவரது ஆதரவாளர்களும் தகராறு செய்துள்ளனர்.
இது குறித்து பஞ்சாயத்து தலைவர், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், குடியரசு தின விழாவிலும் அவரை கொடியேற்ற விடமால் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
பஞ்சாயத்து தலைவரை கொடியேற்ற விடாமல் செய்தது குறித்து செய்தி சேகரிக்க சென்ற, பிரபல செய்தி நிறுவனத்தின் செய்தியாளரையும் அவர்கள் தாக்கி சிறைவைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.