கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மலைவாழ் உறைவி்ட பள்ளி கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார். 33.15 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, ரூ.20.86 கோடி மதிப்பீட்டிலான கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.15.16 கோடி மதிப்பீட்டில் 14 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆய்வு நடத்தினார். இக்கூட்டத்தில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் குமரகுரு, பிரபு, மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, திட்ட இயக்குநர் பி.மகேந்திரன் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியா உல் ஹர் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஆய்வு கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, ” கள்ளக்குறிச்சியில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைய உள்ளது. ஆராய்ச்சி நிலையத்தில் கால்நடை வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும். ரூ.45 கோடி செலவில் உதகையில் கால்நடை விந்தணு ஆராய்ச்சி நிலையம் அமைய உள்ளது. விவசாய விளைபொருட்களை பாதுகாக்க குளிர்பதன நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்த குளிர்பதன நிலையங்கள் ,மூலம் கிராமப்புற விவசாயிகளின் உற்பத்திப்பொருள் வீணாகாமல் தடுக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகளில் தமிழகம் சிறப்பாக ஈடுபட்டு வருகிறது” என தெரிவித்தார்.