சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.736 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் அதிரடியாக உயர்ந்து வந்தது.
மார்ச் 23ம் தேதி கடந்த 7ம் தேதி வரை சவரனுக்கு 11,712 வரை உயர்ந்தது. 7ம் தேதி ஒரு சவரன் 43,328க்கு விற்பனையாகி வரலாற்று சாதனை படைத்தது.
அதன் பிறகு 8ம் தேதி முதல் தங்கம் விலை குறைந்து வந்தது. 8ம் தேதி ஒரு சவரன் 43,080, 10ம் தேதி 42,920, 11ம் தேதி 41,936, 12ம் தேதி 40,832க்கும் விற்கப்பட்டது.
13ம் தேதி 5வது நாளாக தங்கம் விலை குறைந்தது. அன்றைய தினம் ஒரு கிராம் 5,076க்கும், சவரன் 40,608க்கும் விற்கப்பட்டது.
தொடர்ச்சியாக 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 2,740 வரை குறைந்தது. தங்கம் விலை குறைந்து வந்தது நகை வாங்குவோரை சற்று சந்தோஷத்தில் ஆழ்த்தியிருந்தது.
இந்த சந்தோஷம் நீண்ட நாட்கள் கூட நீடிக்கவில்லை.
மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை தங்கம் விலை அதிகரித்தது. கிராம் 24 அதிகரித்து ஒரு கிராம் 5100க்கும், சவரனுக்கு 192 அதிகரித்து ஒரு சவரன் 40,800க்கும் விற்கப்பட்டது.
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றமின்றி ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40,800ஆக இருந்து வந்தது. வர்த்தக தொடக்கத்தின் முதல் நாளான நேற்று, தங்கம் விலை சவரன் ரூ.232 குறைந்து ரூ.40,568க்கு விற்பனையானது.
ஒரு கிராம் விலை ரூ. 29 குறைந்து ரூ.5071க்கு விற்பனை ஆனது. இந்த நிலையில் இதுவரை இல்லாத வகையில், தங்கம் விலை இன்று ரூ. 736 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 92 உயர்ந்து ரூ. 5,167க்கும் சவரன் ரூ. 736 உயர்ந்து ரூ.41,336க்கும் உயர்ந்தது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 76,30க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், “ தங்கம் விலை இந்த காலக்கட்டத்தில் கூடும், குறையும் காலமாகும். முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். அடுத்த வாரம் வரை இப்படி கூடுவதும், குறைவதுவான போக்கு தான் காணப்படும்” என்றார்.