வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெயக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவலாவில் 5 செ.மீ மழையும், பந்தலூர், மற்றும் தளி பகுதிகளில் தலா 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மேலும், மேல் பவானி, அவலாஞ்சி, ஹாரிசன் எஸ்டேட், பிரையர் எஸ்டேட், ஏற்காடு பகுதிகளில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்குவங்க கடலோரப் பகுதியில் வரும் ஆகஸ்டு 19ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
* ஆகஸ்டு 18(இன்று) முதல் 20ம் தேதி வரை வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
* ஆகஸ்டு 18, 19ம் தேதிகளில் கோவா, மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
* ஆகஸ்டு 20 முதல் 22ம் தேதி வரை, வடக்கு மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
* ஆகஸ்டு 18 முதல் ஆகஸ்டு 22ம் தேதி வரை, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமேன அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தென்தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 19.08.2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 1.5 முதல் 2.7 மீட்டர் வரை எழும்பக்கூடும், என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.