#நான்தாப்பா_பைக்_திருடன் : ரஜினியை கிண்டல் செய்தவர் கைது!

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காயமடைந்தவர்களை நலம் விசாரிக்க சென்ற நடிகர் ரஜினிகாந்தை அவமதிப்பதற்காக, நீங்கள் யார்? என்று கேள்வி கேட்டதோடு தன்னை மாணவர் அமைப்பின் நிர்வாகி என்றும் கூறிவந்த போராளி ஒருவர், இருசக்கர வாகனத்தை திருடி கூட்டாளிகளுடன் காவல்துறையினரிடம் சிக்கி உள்ளார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஷியாம் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை எட்டையபுரம் சாலையில் நிறுத்தி இருந்தார்.

அதனை திருடிச்சென்ற கொள்ளையர்கள், அந்த வாகனம் விற்பனைக்கு இருப்பதாக ஓ.எல்.எக்சில் விளம்பரம் வெளியிட்டு இருந்தனர்.

இதனை பார்த்த ஷியாம், ஓ.எல்.எக்சில் தனது வாகனத்தை விற்பனை செய்ய தயாராக இருந்த நபர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார்.

கால்டுவெல் காலனிக்கு வரச்சொன்ன அந்த திருட்டு பாய்ஸ், ஷியாமிடம் திருடிச் சென்ற வண்டிக்கு, அவரிடமே கறாராக பேரம் பேசியுள்ளனர்.

பணம் எடுத்து வந்து வாங்கிக் கொள்வதாக கூறிச்சென்ற ஷியாம் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

பணத்துடன், வாகனக் கொள்ளையர்களை பிடிக்க சாதாரண உடையில் போலீசாரையும் ஷியாம் அழைத்துச்சென்றார்.

அப்போது ஷியாமிடம் திருடிய வாகனத்தைப் போன்ற மற்றொரு பழைய வாகனத்தை இருட்டில் வைத்து மோசடியாக கைமாற்றிவிட முயன்ற கொள்ளையனை காவல்துறையினர் சுற்றிவளைத்தனர்.

அவனைப் பிடித்து விசாரித்தபோது, ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது ஆறுதல் கூற வந்த நடிகர் ரஜினிகாந்தைப் பார்த்து நீங்கள் யார்? என்று கேட்ட சந்தோஷ் என்பது தெரியவந்தது.

ரஜினியை அசிங்கப்படுத்தும் நோக்கில் கேள்வி கேட்டதால் இந்திய அளவில் டிவிட்டரிலும், ஆங்கில ஊடகங்களிலும் பிரபலமான போராளி சந்தோஷை ஆரம்பத்தில் அழைத்து பெருமைப் படுத்திய அரசியல் கட்சியினர் ஒரு கட்டத்தில் கைவிட்டதாகக் கூறப்படுகின்றது.

இதனால் சந்தோஷ் சுயமாக சிந்தித்து அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

அந்த லெட்டர்பேடு அமைப்புக்கு தொண்டர்கள் திரளாததால், தலைவர் , செயலாளர், பொருளாளர் என அனைத்துப் பொறுப்புகளையும் அவரே பெருந்தன்மையுடன் கவனித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பணத்தேவைக்கு தனது கூட்டாளிகளான மணிகண்டன், சரவணன் ஆகியோருடன் சேர்ந்து இரு சக்கர வாகனங்களைத் திருடி போலி ஆவணங்களை தயார் செய்து ஓ.எல்.எக்ஸ் மூலம் விற்று வந்துள்ளார் போராளி சந்தோஷ்..!

இந்த நிலையில் தான் வாகனத்தை பறிகொடுத்தவரிடமே, திருடிய வாகனத்தை மோசடியாக விற்க முயன்றதால் காவல்துறையினரிடம் கையும் களவுமாக சிக்கி உள்ளார் போராளி சந்தோஷ் என்கின்றனர் காவல்துறையினர்.

இதையடுத்து போராளித் திருடர் சந்தோஷையும், அவர் அளித்த தகவலின் பேரில் கூட்டாளிகளான மணிகண்டன் மற்றும் சரவணன் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே