கோவையில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது :-
தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என்று உறுதியளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் சிறுமியை கடத்த முயன்ற வழக்கில் நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல், கொரோனா காலத்திலும் அதிக முதலீடுகளை ஈர்த்து தமிழகம் முதல் மாநிலமாக திகழ்வதை குறிப்பிட்டு முதல்வர் பெருமிதம் கொண்டார்.
மேலும் அவர் பேசியதாவது, ‘தமிழகத்தில் கொரோனாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேவையான உபகரணங்கள் கையிருப்பிலுள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் கொரோனா காலத்தில் மக்கள் நலப்பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனா தொற்றை தடுக்க முடியும்.அத்திக்கடவு அவிநாசி திட்டப்பணிகள் 30 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
ஈரோடு பவானியாற்றில் 7 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும்.கீழ்பவானி கால்வாயை ரூ.985 கோடியில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோபிசெட்டிப்பாளையத்தில் புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. ஈரோட்டில் ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ‘கட்டும்பணி தொடங்கியுள்ளது.
பெருந்துறை பகுதி மக்களுக்கான கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 70 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 2020-21-ம் ஆண்டின் மேட்டூர் கால்வாயை சீரமைக்க கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
ஈரோட்டில் தெருத்தெருவாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.ஈரோட்டில் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கோவையில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்படுவதை ஏற்க முடியாது.
பெரியார் சிலை அவமதிப்பு விவகாரத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தற்போதைக்கு எண்ணம் இல்லை’ என்றார்.