சென்னை தீவுத்திடல் அருகே அப்புறப்படுத்தப்பட உள்ள மக்களுக்கு அங்கேயே அடுக்குமாடி குடியிருப்பு வழங்க வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை தீவுத்திடல் அருகே 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் காந்திநகர் பொதுமக்களை காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிராக போராடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, சென்னை தீவுத்திடல் அருகே உள்ள குடியிருப்புவாசிகளை விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நல்லகண்ணு குடியிருப்பு மக்களை பெரும்பாக்கத்துக்கு அப்புறப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன் தீவுத்திடல் மக்கள் தற்போது அகற்றப்பட மாட்டார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவாதம் அளித்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.