இயக்குநர் ஷங்கர் இந்தியன் – 2 படத்தை தற்போது இயக்கி வருகிறார். சில பிரச்னைகளால் அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறாமல் இருப்பதால், அடுத்தடுத்து படங்களை இயக்குவதற்கான பணிகளை தொடங்கிவிட்டார் ஷங்கர்.
இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் பிற படங்களை இயக்க ஷங்கருக்கு இடைக்கால தடை விதிக்குமாறு லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
இதனால் இயக்குநர் ஷங்கர், நடிகர் ராம் சரண் நடிப்பில் அடுத்த படத்தை இயக்கவிருப்பது உறுதியானது.
அந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படத்தை இந்தியில் ரீ மேக் செய்ய இயக்குநர் ஷங்கர் ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அந்நியன் ரீ மேக்கில் ரன்வீர் சிங் நடிக்கவிருக்கிறார்.
இந்த நிலையில், அந்நியன் திரைப்படத்தை ரீமேக் செய்ய முறையான அனுமதி பெறவில்லை என அப்படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அப்படத்திற்கான ரீ மேக் உரிமைகள் தன்னிடம் இருப்பதாகவும் சுஜாதாவிடம் ரூ.5 லட்சம் பணம் கொடுத்து அந்த உரிமையை தான் பெற்றிருப்பதாகவும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.