சீன வங்கிகளில் பெற்ற கடனுக்காக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி 5,446 கோடி ரூபாயை 21 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேசன் குழுமத்தின் தலைவரும் முகேஷ் அம்பானியின் சகோதரருமான அனில் அம்பானி, கடந்த 2012 ஆம் ஆண்டு சீனாவில் மூன்று வங்கிகளிடம் இருந்து 717 மில்லியன் டாலர் கடனாக பெற்றிருந்தார்.
ஆனால் நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் சுமைக் காரணமாக குறிப்பிட்ட காலத்துக்குள் கடனை திரும்ப செலுத்தவில்லை.
மேலும் கடந்த ஆண்டு ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து கடனை மீட்கும் நடவடிக்கைகளில் சீன வங்கிகள் இறங்கியுள்ளன.
இது தொடர்பான வழக்கு இங்கிலாந்து லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை இங்கிலாந்து நீதிமன்றம் நேற்று வழங்கியது.
அதில் மூன்று சீனா வங்கிகளிடம் பெற்ற 716 மில்லியன் டாலர் கடனை அனில் அம்பானி 21 நாட்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இது இந்திய மதிப்பில் 5,446 கோடி ரூபாயாகும்.
இது குறித்து தெரிவித்துள்ள அனில் அம்பானியின் செய்தித் தொடர்பாளர், இது அனில் அம்பானியின் தனிப்பட்ட கடன் அல்ல எனவும்; இந்த கடன் தொகைக்கு அனில் அம்பானி கையெழுத்திடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்ட ரீதியாக ஆலோசனைகளை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்; இது ரிலையன்ஸ் குழுமத்தின் மற்ற நடவடிக்கைகளை பாதிக்காது எனவும் அவர் தெரிவித்தார்.