அங்கொடா லொக்கா உயிரிழந்த விவகாரத்தில் கைதானவர்களை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி குற்றவியல் தலைமை நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டுள்ளார்.
அமானி தான்ஜி, சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் தேடப்பட்டு வரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா, தமிழகத்தில் உள்ள கோவையில் மர்மமான முறையில் உயிரிழந்தான்.
இந்த வழக்கில் லொக்காவின் காதலி உட்பட 3 பேர் கைது செய்த நிலையில், தற்பொழுது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அதில், இலங்கை தாதா அங்கொட லொக்கா முக அறுவை சிகிச்சை செய்து உருவத்தை மாற்றியது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமானது.
கோவை தனியார் மருத்துவமனையில் மூக்கு அறுவை சிகிச்சை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தான் சினிமாவில் நடிக்க இருப்பதாக கூறி மூக்கை பெரிதுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
போலீசாரிடமிருந்து தப்புவதற்காக தோற்றத்தை மாற்றிக் கொண்டு திரிந்ததாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுவுக்கு கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.