கடந்த ஜூன் 24 ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த நயினார் குப்பத்தில் சசிகலா என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்யூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் பேரில் உடலை கைப்பற்றிய போலீசார், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்.
பின்னர் அன்றே அடக்கம் செய்தனர்.
அடக்கம் செய்த மறுநாள் தன் தங்கையின் மரணத்தில் மர்மம் உள்ளதாக , அவரது அண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், அதே பகுதியை சேர்ந்த திமுகவின் நிர்வாகியாக இருக்கும் தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருசோத்தமன் ஆகியோர் தன் தங்கையை கொலை செய்து விட்டு நாடகமாடியதாக புகார் தெரிவித்திருந்தார்.
குற்றம் சாட்டப்பட்ட தேவேந்திரனும் புருஷோத்தமனும் அந்த பெண் குளிக்கும்போது வீடியோ எடுத்து அவரை தொடர்ந்து மிரட்டி, பாலியல் துன்புறுத்தல் செய்து வந்ததாகவும், வீடியோவை இணையதளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி வந்ததாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனிடையே அந்த பெண்ணிற்கு திருமண ஏற்பாடு செய்ததாகவும், அப்போது இருவரும் அந்த பெண்ணை மிரட்டியதாகவும்; அதனாலேயே அவரை தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெண்ணின் சடலத்தை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கூறி பெண்ணின் அண்ணன் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் திமுகவை சேர்ந்த தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருசோத்தமன் ஆகியோர் மீது தற்கொலை செய்ய தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மீண்டும் பிரேத பரிசோதனை செய்யும் வரை சுடுகாட்டில் இருந்து செல்ல மாட்டேன் என சசிகலாவை அடக்கம் செய்த இடத்திலேயே காத்து இருக்கிறார் அவரது அண்ணன்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.