கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குணமடைந்ததை தொடர்ந்து இன்று வீடு திரும்பினார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா கரோனா வைரஸால் கடந்த 2-ம் தேதி பாதிக்கப்பட்டார்.
குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அமித் ஷா, கடந்த சில நாட்களுக்கு கரோனாவிலிருந்து குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினார்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி அடுத்த சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதாக அமித் ஷா ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில் கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சைக்காக கடந்த 18-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு லேசான உடல் சோர்வும், உடல் வலியும் இருந்ததால் கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.
இந்தநிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பில், ‘எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முழுமையாகக் குணமடைந்துவிட்டார்.’ எனத் தெரிவித்தது.
சிகிச்சை முடிந்து குணமடைந்ததை தொடர்ந்து அமித் ஷா இன்று காலை 7 மணியளவில்
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.