மகாராஷ்டிராவில் தொடர்ந்து உயரும் கரோனா தொற்று: ஒரே நாளில் 36,902 பேருக்கு பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் 62,258 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 36,902 பேரும், பஞ்சாபில் 3,122 பேரும், சத்தீஸ்கரில் 2,665 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து. இயல்பு நிலையும் திரும்பியது. இந்தநிலையில் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

குறிப்பாக மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

மகாராஷ்டிராவில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்திட நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை காலவரையற்ற இரவு ஊரடங்கை அமல்படுத்தி மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

எனினும் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்தே காணப்படுகிறது. இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் அன்றாட கோவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 79.57% பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 62,258 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 36,902 பேரும், பஞ்சாபில் 3,122 பேரும், சத்தீஸ்கரில் 2,665 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் தற்போது 4,52,647 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 3.8 சதவீதமாகும். நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,95,023 ஆக (94.84%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 30,386 பேர் புதிதாக குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 291 பேர் உயிரிழந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே