தலைமறைவு குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா, நீதிமன்றத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது
இந்தியாவில் உள்ள பொதுதுறை வங்கிகளில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்கு தப்பி சென்றவர் தொழிலதிபர் விஜய் மல்லையா.
இவர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து அவரை நாடு கடத்த முயற்சி செய்து வருகிறார்கள்.
இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த டால்ஜியோ நிறுவனம் மூலம் தன்னுடைய மகன் சித்தார்த், மகள்கள் தனியா, லியானா ஆகியோருக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை மாற்றியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள் விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளி என கடந்த 2017-ம் ஆண்டு அறிவித்து இருந்தார்கள்.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, விஜய் மல்லையா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்..
இந்த மனுவை நீதிபதிகள் யு.யு.லலித் மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அமர்வு விசாரித்தது.
இதில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பை அறிவிக்க உள்ளது.