ஜெயலலிதாவின் கனவை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அதிமுகவின் இலக்கு.
அதுவே ஜெயலலிதாவின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்!
தாய்வழி வந்த
தங்கங்கள் எல்லாம்
ஓர்வழி நின்று
நேர்வழி சென்றால்
நாளை நமதே!” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கும் குறைவான நாள்களே இருப்பதால், அரசியல் களம் பரபரப்பாகத் தொடங்கியுள்ளது.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பற்றி கடந்த 2 நாள்களாக கட்சி அமைச்சர்கள் வெவ்வேறு கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மூத்த நிர்வாகிகள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் சுட்டுரைப் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.