அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்கும் பா.ஜ.க

கூட்டணி கட்சிகளுக்கு இடம் தராமல் தவிர்க்கவே மேயர் உள்ளிட்ட பதவிகளை மறைமுகத் தேர்தல் மூலம் நடத்த ஆளும்கட்சி முயற்சி செய்கிறது என்று பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை டிசம்பர் 13-ம் தேதிக்குள் வெளியிடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன.

தமிழகத்தில் மேயர், நகராட்சி, ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு பதவிகளுக்கு தற்போது நேரடித் தேர்தல் நடைபெறும் முறை உள்ளது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேயர், நகராட்சி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் முறையில் தேர்தல் நடத்த ஆலோசனை நடத்தப்பட்டது என்று செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மேயர் பதவி நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல் இருப்பதற்கான வாய்ப்பை அரசு ஏற்படுத்தியிருக்கிறது.

கூட்டணிக் கட்சிகள் மேயர் உள்ளிட்ட பதவிகளைக் கேட்பதைத் தவிர்க்கவே அ.தி.மு.க அரசு இந்த முயற்சி மேற்கொண்டுள்ளது. ஜனநாயக சீர்கேடை ஆளும் கட்சி தற்போது செய்துள்ளது.

அ.தி.மு.கவுக்கு நேரடித்தேர்தலை எதிர்கொள்வதற்கு தெம்பு இருந்தால் ஏற்கெனவே இருந்த முறையில் நேரடித் தேர்தல் முறையில் தேர்தலை தமிழ்நாடு அரசு நடத்தவேண்டும் என்று மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே