சர்வதேச விமானப் போக்குவரத்து விரைவில் தொடங்கும் என்றும் அமெரிக்காவுக்கு நாளை முதல் விமானப் போக்குவரத்து தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று ஹர்தீப் சிங் புரி செய்தியாளர்களிடம் பேசுகையில், சர்வதேச விமானப் போக்குவரத்தைத் தொடங்குவது குறித்து இதர நாடுகளுடன் பேசி வருகிறோம், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பல நாடுகள் இந்திய விமானங்கள் உள்பட வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்ல தடை விதித்துள்ளன.
தொடர்ந்து விமானப் போக்குவரத்தைத் தொடங்குவது குறித்து பேசி வருகிறோம்.
தற்போது மூன்று நாடுகளுடனான பேச்சுவார்த்தை முடிவடையும் நிலையில் உள்ளது.
உதாரணமாக ஏர் பிரான்ஸ் விமான சேவை நிறுவனம் தில்லி, மும்பை, பெங்களூரு நகரங்களுக்கு ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 1 வரை 28 விமானங்களை இயக்க தற்காலிகமாக முடிவு செய்துள்ளது.
அதேபோல அமெரிக்காவில் இருந்து ஜூலை 17 முதல் 31 வரை 18 விமானங்கள் இயக்க ஒப்புதல் கிடைத்துள்ளது.
ஜெர்மன் விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
விரைவில் போக்குவரத்து தொடங்கும் என்று ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.