பள்ளி வாசலுக்குள் சென்ற அதிமுக எம்.எல்.ஏ விரட்டியடிப்பு..!!

மதுரை மேலூர் தொகுதி அதிமுக வேட்பாளரான பெரியபுள்ளான் எம்.எல்.ஏ பள்ளிவாசலுக்குள் சென்று வாக்கு சேகரித்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்ட இளைஞர்கள், அவரை வெளியே விரட்டினர்.

மதுரை மேலூர் தொகுதி அதிமுக வேட்பாளரான பெரியபுள்ளான் எம்.எல்.ஏ கொட்டாம்பட்டி அடுத்த சொக்கலிங்க புரத்தில் கடை கடையாக சென்று வாக்கு சேகரித்தார். செண்டை மேளம் முழங்க அதிமுகவினர் உடன் சென்றனர்.

அதன் தொடர்ச்சியாக பெரியபுள்ளான் அங்கிருந்த பள்ளி வாசலில் நின்றிருந்த பெரியவர்களிடம் வாக்கு சேகரிக்க உள்ளே சென்றார். அப்போது அவருடன் ஆதரவாளர்களும் உள்ளே சென்றனர்.

பள்ளி வாசலுக்குள் அதிமுக வேட்பாளர் சென்ற தகவல் அறிந்ததும் வேக வேகமாக அங்கு திரண்ட இளைஞர்கள் அவரை வெளியே வரச்சொல்லி கோஷம் எழுப்பினர்.

இன்னும் சிலர் எப்படி பள்ளி வாசலுக்குள் கும்பலாக ஓட்டு கேட்டு வரலாம் ? என்று கூறி ஆவேசமாக பாய்ந்தனர் சிலர் வெளியே இருந்தபடி பள்ளி வாசல் கதவுகளை இழுத்து பூட்டினர்.

ஆனால் கதவை திறந்து கொண்டு கையெடுத்து கும்பிட்டப்படி வெளியே வந்த பெரியபுள்ளான் அவர்களிடம் மன்னிக்குபடி கூறி சமாதானப்படுத்த முயன்றார்.

உடனடியாக அங்கு வந்த காவல் ஆய்வாளர் எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்களிடம் இருந்து பெரியபுள்ளான் உள்ளிட்ட அதிமுகவினரை பத்திரமாக வெளியே அழைத்துச்சென்றனர்

அந்த இளைஞர்கள் தொடர்ந்து பெரியபுள்ளானுக்கு எதிராக கோஷம் எழுப்பிக் கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் மேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளான் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறி வழிபாட்டுத் தலத்தில் வாக்கு சேகரித்ததாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாலச்சந்தர் அளித்த புகாரின் அடிப்படையில் கொட்டாம்பட்டி காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே