நடிகர் சங்கம் முறையாக செயல்படவில்லையா?- விஷால் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்

தென்னிந்திய நடிகர் சங்கம் முறையாக செயல்படாமல் இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால் உள்ளிட்டோருக்கு வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து, அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 15ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் முறையாக செயல்படவில்லை என்றும், அச்சங்கத்தின் உறுப்பினர்களான எம்.சித்ரலேகா, எம்.ஆர்.பி.சந்தானம் ஆகியோர் வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகளை யாரும் கண்காணிக்கவில்லை என்றும் புகாரில் குறிப்பிட்டு இருந்தனர்.

இதையடுத்து, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயல்பாடுகளை கவனிக்க சிறப்பு அதிகாரியை ஏன் நியமிக்க கூடாது என கேள்வி எழுப்பியுள்ள பதிவுத்துறை அதிகாரிகள், இது குறித்து நாசர், பொன்வண்ணன், விஷால் ஆகியோர் 30 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே