ஓயா‌ம அப்டேட் கேட்ட சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட்.

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் அப்டேட் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகிறது.
சிவகார்த்திகேயன் கடைசியாக பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ என்ற படத்தில் நடித்திருந்தார். இரும்புத்திரை படத்திற்கு பிறகு பி.எஸ் மித்ரன் இயக்கிய அந்தப் படத்தில் அர்ஜுன் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார். கல்வித் துறையில் நடக்கும் விஷயங்கள் மற்றும் இந்தியாவில் ஏன் அதிகம் கண்டுபிடிப்புகள் வருவதில்லை என்பது பற்றியும் அந்தப் படத்தில் விவரித்து இருந்தனர். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தது. மேலும் எதிர்பார்த்த அளவு வசூலும் பாக்ஸ் ஆபிசில் அந்த படத்திற்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படங்களான டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த இரண்டு படங்களின் பணிகளும் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு உள்ளன.

ஜூன் மாதத் தொடக்கத்தில் தமிழக அரசு திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மட்டும் மேற்கொள்ள அனுமதி அளித்தது. அந்த சமயத்தில் டாக்டர் படத்தின் எடிட்டிங் பணிகள் துவங்கி நடைபெற்று வந்தது. அதன் பிறகு மீண்டும் அரசு முழு ஊரடங்கு சென்னை முழுவதும் விதித்ததால் அது நிறுத்தப்பட்டது.

மேலும் சமீபத்தில் சிவகார்த்திகேயன் டிவிட்டரில் ஒரு பிரம்மாண்ட மைல்கல்லை கடந்தார். அவருக்கு 6 மில்லியன் ரசிகர்கள் ட்விட்டரில் உள்ளனர். அதற்கு நன்றி கூறி நேற்று அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். “ட்விட்டரில் எனக்கிருக்கும் 6 மில்லியன் நண்பர்களுக்கு நன்றி. சகோதர சகோதரிகளான நீங்கள் எனக்குத் தரும் நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி” என சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டாக்டர் படத்தின் அப்டேட் கொடுங்கள் என தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தற்போது படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இன்று மாலை 7 மணிக்கு ஒரு முக்கிய அப்டேட் வெளிவரும் என தெரிவித்துள்ளனர். அது என்னவாக இருக்கும் என தற்போது ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.

“ஓயாம டாக்டர் அப்டேட் கேட்டதற்கு ஒரு சூப்பர் அப்டேட் வருது. இன்று மாலை ஏழு மணிக்கு. அலாரம் வெச்சுக்கோங்க. அப்டேட்டோட வரோம் என கேஜேஆர் நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
கோலமாவு கோகிலா பட புகழ் நெல்சன் தான் டாக்டர் படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகை பிரியங்கா அருள் மோகன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அவர் தமிழ் பெண்தான் என்றாலும் இதற்கு முன்பு தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அவருக்கு இது தான் முதல் படம்.

டாக்டர் படத்தின் ஷுட்டில் இன்னும் முடிக்கப்படாமல் இருப்பதால் இறுதி கட்ட ஷுட்டிங் ஒரே கட்டமாக கோவாவில் நடத்தி முடித்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் கொரோனா பிரச்சனை முடிவு பெற்ற பிறகு தான் துவங்கும் என தெரிகிறது.

டாக்டர் படத்தில் யோகி பாபு காமெடியனாக நடித்துள்ளார் மற்றும் வினய் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் ஃபேவரைட் இசையமைப்பாளர் அனிருத் தான் டாக்டர் படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

மேலும் சிவகார்த்திகேயனின் மற்றொரு படமான அயலான் படத்தின் ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டு இருக்கிறது. ஆர்.ரவிக்குமார் இயக்கி வரும் அந்த சயின்ஸ் பிக்ஷன் படத்தின் கதை ஏலியன்கள் பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே