புதுச்சேரி காமராஜ் நகரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 7,171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

புதுவை காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் வைத்திலிங்கம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதனால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.

காங்கிரஸ் சார்பில் ஜான்குமார், என்.ஆர். காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரன், முன்னாள் அமைச்சர் கண்ணனின் கட்சியான மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் சார்பில் வெற்றிச்செல்வன், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரவீணா உள்ளிட்ட 9 பேர் போட்டியிட்டனர்.

இதில், காங்கிரசுக்கு தி.மு.க.வும், என்.ஆர்.காங்கிரசுக்கு அ.தி.மு.க.வும் ஆதரவு அளித்தன.

இந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 21-ந் தேதி நடந்தது.

தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை – 35009. இதில் 24,310 வாக்குகள் பதிவாகி இருந்தன. பதிவான வாக்கு சதவீதம் 69.44 ஆகும்.

வாக்கு எண்ணிக்கை இன்று லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கம் முதலே, முன்னிலை வகித்து வந்த காங்கிரசின் ஜான்குமார், 14 ஆயிரத்து 782 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அவரை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் புவனேஸ்வரன் 7,611 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

தொடங்கிய ஒரு மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவுக்கு வந்தது. 

7,171 வாக்குகள் வித்தியாசத்தில் ஜான் குமார் வெற்றி பெற்றதால், நியமனம் உள்பட 33 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவையில், காங்கிரசின் பலம் 15ஆக அதிகரித்துள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே