ஆண் – பெண் இரு பாலினத்தவர் போலவே திருநங்கையரும் அனைத்து நிலைகளிலும் சம உரிமை பெற்று வாழ்ந்திட வேண்டும். திருநங்கையர்/ திருநம்பிகள் உரிமைகளை திமுக பாதுகாத்திடும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின், தனது முகநூலில் பதிவிட்டுள்ள செய்தி:
‘ஆண் – பெண் இரு பாலினத்தவர் போலவே திருநங்கையரும் அனைத்து நிலைகளிலும் சம உரிமை பெற்று வாழ்ந்திட வேண்டும் என்பதை நம் அனைவருக்கும் நினைவூட்டும் வகையில் இன்று (ஏப்ரல் 15) திருநங்கையர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
திருநங்கை எனும் சொல்லுக்கு அரசாங்கத்தின் அங்கீகாரத்தை அளித்து அவர்களின் நலன் காக்கத் தனி வாரியம் அமைத்தவர் தலைவர் கருணாநிதி.
அவர் வழியில் திமுக என்றும் திருநங்கையர் / திருநம்பியர் உரிமைகளைக் காத்து நிற்கும் என்ற உறுதியினை வழங்கி, திருநங்கையர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திருநங்கையர் தினத்தை முன்னிட்டு திருநங்கை சுதா உள்ளிட்டோர் ஸ்டாலினைச் சந்தித்தனர். அவர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.