டி20 போட்டியில் 2-வது இந்தியர்: ரோஹித் சர்மா புதிய மைல்கல்

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா ஒட்டுமொத்த டி20 போட்டிகளிலும் சேர்த்து 9 ஆயிரம் ரன்களை குவித்த 2-வது இந்திய வீரர் எனும் சாதனையை இன்று படைத்தார்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார்

இருப்பினும் ரோஹித் சர்மா 11 ரன்களை எட்டியபோது, டி20 போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களை எட்டிய 2-வது இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.சர்வதேச டி20 போட்டிகள், ஐபிஎல் போட்டிகள் என அனைத்திலும் சேர்ந்து இந்த சாதனை கணக்கிடப்படுகிறது. முதலிடத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 9,650 ரன்களுடன் உள்ளார்.

டி20 கிரிக்கெட் போட்டியில் நவீன லிஜன்ட் என்று ரோஹித் சர்மாவைக் குறிப்பிடலாம், ஏனென்றால், டி20 போட்டிகளில் அதிகமான ரன்கள் குவித்த வீரர்களில் 9-வது இடத்தில் ரோஹித் இருக்கிறார். முதலிடத்தில் கிறிஸ் கெயில் 13,270 ரன்களுடன் உள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா, 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். 200 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ரோஹித் சர்மா 5,230 ரன்கள் குவித்து, 31.31 சராசரி வைத்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் தவிர்த்து, டெக்கான் சார்ஜர்ஸ், அணிக்காகவும் ரோஹித் சர்மா விளையாடி, 2009ம் ஆண்டு சீசனில் கோப்பையை வென்ற அந்த அணியில் இடம் பெற்றிருந்தார்.

சர்வதேச டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா 2,800 ரன்கள் சேர்த்து, 32.41 சராசரி வைத்துள்ளார். டி20 போட்டிகளில் 4 சதங்கள் அடித்த கிரிக்கெட்டில் ஒரே வீரர் முதல்வீரர் ரோஹித் சர்மாதான்.

டி20 போட்டிகளில் அதிகமான ரன்கள் சேர்த்த இந்திய வீரர்களில் கோலி 88 போட்டிகளில் 3,078 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 2-வது இடத்தில் உள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே