பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து 4,950 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் கே.கே. நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தினசரி இயங்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 4 ஆயிரத்து 950 பேருந்துகள் என மொத்தமாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 7,175 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இருந்து 29,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பிற ஊர்களில் இருந்து 9,995 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்த போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பொங்கல் பண்டிகைக்கு பின் பிற ஊர்களில் இருந்து 16ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை சென்னைக்கு 4500 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களில் பல்வேறு ஊர்களுக்கு 9,370 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவித்தார்.

சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு வரும் 9ஆம் தேதி தொடங்கும் என்றும், இதற்காக 17 முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கு ஏதுவாக 9445014450, 9445014436 ஆகிய செல்போன் எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலம் செல்லும் அனைத்து பேருந்துகளும் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்படும்.

திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும். வேலூர், ஓசூர் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, விழுப்புரம், விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், கோவை மற்றும் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும்.

சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் இடங்களுக்கு பயணிகள் செல்வதற்கு போதிய அளவில் மாநகர பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே