ஈரானில் உக்ரைன் விமானம் விபத்து : 180 பேர் பலியான கொடூரம்!

ஈரானில் பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 180 பேரும் இதில் பலியானார்கள்.

ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே இந்த விபத்து நடந்துள்ளது.

டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து பஹ்ரைன் நோக்கி அந்த போயிங் 737 -800 விமானம் புறப்பட்டது.

விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் இந்த விபத்து நடந்துள்ளது.

சமீப நாட்களாக போயிங் விமானம் உலகம் முழுக்க அதிக விபத்துக்கு உள்ளாகிறது.

பொதுவாக போயிங் விமானங்களில் நிறைய கோளாறுகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதற்கு மத்தியில்தான் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடந்து இருக்கலாம் என்கிறார்கள்.

விமானத்தில் பயணித்த 180 பேர் என்ன ஆனார்கள் என்பது குறித்த விவரம் முதலில் வெளியாகவில்லை.

விமான விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு படையினர் சென்று இருக்கிறார்கள். அங்கு ராணுவமும் குவிக்கப்பட்டு அவசர மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

முதற்கட்ட மீட்பு பணி முடிந்த நிலையில் இந்த விமான விபத்தில் அதில் பயணித்த 180 பேரும் பலியானது உறுதியாகி உள்ளது.

ஈரானில் ஏற்கனவே போர் பதற்றம் நிலவி வருகிறது.

அமெரிக்க தளவாடங்களை இன்றுதான் ஈரான் ஏவுகணை மூலம் தாக்கி அழித்தது. இதற்கு மத்தியில் ஈரானில் விமான விபத்து ஏற்பட்டடுள்ளது.

இதனால் ஈரான் அரசு கடும் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது.

இதுகுறித்து ஈரான் அதிகாரிகள், “ஈரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் 737-800 இன்று (புதன்கிழமை) தெஹ்ரானின் புறப்பகுதியில் விபத்தில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து விமானம் தனது தொடர்பை இழந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 180 பேர் பயணம் செய்தனர். விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகி உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே