பொதுத்தேர்வுகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் தேர்வெழுத தடை

பொதுத்தேர்வின்போது ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் தேர்வெழுத தடை விதிக்கப்படும் என தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் மார்ச் 2ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை பள்ளி பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

அதில், அனைத்து வினாத்தாள் கட்டுக்காப்பு மையங் களையும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பாதுகாப்புடன் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில் எவ்வித கட்டுமான பணிகளும் நடைபெறாமல் இருக்க வேண்டும்.

மேலும், தேர்வு நாட்களில் அப்பள்ளிகளில் படிக்கும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு காலையில் விடுமுறை அளிக்க வேண்டும். 

தேர்வுப்பணிகளுக்கும் எக்காரணம் கொண்டும் தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் அல்லது ஆசிரியர்களை நியமனம் செய்யக்கூடாது.

பறக்கும்படை உறுப்பினர், அறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட உள்ளவர்கள் அன்றைய பாடத்தை நடத்தும் ஆசிரியர்களாக இல்லாமல் இருக்க வேண்டும்.

தேர்வறைக்குள் மாணவர்கள், ஆசிரியர்கள் செல்போன் உள்ளிட்ட எந்த தகவல் தொடர்பு சாதனங்களையும் எடுத்துச் செல்லக்கூடாது.

இதை மீறினால் ஆசிரியர்கள், மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், முதன்மைக் கல்வி அதிகாரிகள் எழுத்துப்பூர்வமான ஆணைகள் வழியாக மட்டுமே பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். ஒரு போதும் வாய்மொழி ஆணைகள் தரக்கூடாது.

இவைதவிர தேர்வின்போது காப்பி அடித்தல், விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் அதிக பட்சம் 5 ஆண்டுகள் தேர்வெழுத தடை விதிக்கப்படும்.

மேலும், தேர்வர்கள் ஆள்மாறாட்டம் செய்தது கண்டறியப்பட்டால் உடனே காவல்துறையிடம் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே