PSBB ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் புகார்..!!

சென்னை கேகே நகரில் செயல்பட்டு வரும் பிஎஸ்பிபி பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராஜகோபாலன். இவர் ஆன்லைன் வகுப்புகளின் போது, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

அரைகுறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்புகள் எடுத்ததாகவும் வாட்ஸ்அப் குரூப்களில் ஆபாசமான லிங்க்குகள் அனுப்புவதாகவும் அடுக்கடுக்காக புகார்கள் எழுந்தது.

அதுமட்டுமில்லாமல், ஆசிரியர் ராஜகோபாலன் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாணவிகள் குற்றஞ்சாட்டியது சர்ச்சையை கிளப்பியது.

இந்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்த நிலையில் பிஎஸ்பிபி பள்ளி நிர்வாகம் ஆசிரியர் ராஜகோபாலனை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தது. 

இதனிடையே, ஆசிரியர் ராஜகோபாலன் மீது வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இவரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தைரியமாக முன்வந்து புகார் அளிக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன் படி, தற்போது மேலும் இரு மாணவிகள் ஆசிரியர் ராஜகோபாலனுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.

ஏற்கனவே இரண்டு மாணவிகள் புகார் அளித்த நிலையில் தற்போது மேலும் 3 மாணவிகள் புகார் அளித்து இருப்பதால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராஜகோபாலனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே