வாழ்வில் 2-வது இன்னிங்ஸ்: தொலைக்காட்சி வர்ணனையாளரைத் திருமணம் செய்தார் பும்ரா

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கும், தொலைக்காட்சி வர்ணனையாளர் சஞ்சனா கணேசனுக்கும் இன்று திருமணம் நடந்தது.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா கடந்த 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து தனிப்பட்ட காரணங்களால் ஓய்வு தேவை என பிசிசிஐ அமைப்பிடம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, பும்ராவுக்கு கடைசி டெஸ்ட் போட்டியிலும், டி20 தொடரிலும் ஓய்வு அளிக்கப்பட்டது.

டெல்லியில் இரு குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் ஆகியோர் மட்டும் பங்கேற்ற நிலையில் பும்ரா, சஞ்சனா கணேசன் திருமணம் நடந்தது. தனது திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பும்ரா பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், “நீங்கள் தகுதியானவர் என உங்களைக் காதல் கண்டறிந்தால் அது உங்களை இயக்கும். காதலால் இயங்குகிறோம். இருவரும் இணைந்து புதிய பயணத்தைத் தொடங்குகிறோம். எங்கள் வாழ்க்கையில் இன்று மகிழ்ச்சியான நாள். எங்கள் திருமணச் செய்தியையும், மகிழ்ச்சியையும் உங்களிடம் பகிர்ந்து ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம். ஜஸ்பிரித் மற்றும் சஞ்சனா” எனத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டி20 தொடரில் பும்ரா இடம் பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி ட்விட்டரில் பும்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில், “சஞ்சனாவிடம் போல்டாகிவிட்டார் பும்ரா. காதல், புன்னகை, மகிழ்ச்சியுடன் பும்ரா, சஞ்சனா கணேசன் வாழ்கைக்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பும்ரா, சஞ்சனா கணேசன் திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே