நீண்ட நாள் கனவு நிறைவேறியது: சமந்தா நெகிழ்ச்சி

நீண்ட நாள் கனவு நிறையேறியது என்று ‘ஷகுந்தலம்’ பட வாய்ப்பு குறித்து சமந்தா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

கவிஞர் காளிதாசர் எழுதிய சமஸ்கிருத நாடகம் ‘அபிஜன ஷகுந்தலம்’. இதில் ஷகுந்தலம் கதாபாத்திரத்தை வைத்து இயக்குநர் குணசேகர் புராணத் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். தில் ராஜு மற்றும் குணா டீம் வொர்க்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘ஷகுந்தலம்’ எனத் தலைப்பிடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன.

இதில் ஷகுந்தலம் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கவுள்ளார். அவருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க தேவ் மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பூஜை இன்று (மார்ச் 15) நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக அல்லு அரவிந்த் கலந்துகொண்டார்.

‘ஷகுந்தலம்’ படப்பூஜை முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் சமந்தா பேசியதாவது:

“50 திரைப்படங்களால் ஆன இந்தப் பயணத்தில், நான் பல வகையான திரைப்படங்களில், பல வகையான பாத்திரங்களில் நடித்துள்ளேன். ‘தி பேமிலி மேன்’-ல் ஆக்‌ஷன் கூட முயற்சி செய்தேன். வில்லியாகவும் நடித்துள்ளேன். ஆனால், ஒரு வரலாற்றுத் திரைப்படத்திலோ அல்லது ஒரு இளவரசியாகவோ நடிப்பதுதான் எப்போதும் என்னுடைய கனவாக இருக்கிறது.

என்னுடைய சினிமா வாழ்வின் இந்தக் கட்டத்தில் தில் ராஜு சார் மற்றும் குணா சார் ஆகியோர் என் வாழ்வின் மிகப்பெரிய அன்பளிப்பைக் கொடுத்துள்ளனர். சினிமா துறையின் 10 ஆண்டுகளில், இன்றுதான் நான் நீண்ட நாள் கனவு கண்ட ஒரு பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இப்படத்தில் என்னுடைய 100 சதவீத உழைப்பைக் கொடுப்பேன் என்று நம்புகிறேன். அதைத்தான் குணா சாரும் விரும்புகிறார். இவ்வளவு நுணுக்கமான ஒரு கதையை நான் கேட்டதே இல்லை. படத்தைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. படத்தைப் பற்றிய அனைத்தும் இயக்குநரின் சிந்தனையில் உள்ளன. எனவே, இப்படத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குநரின் கற்பனையை நிஜமாக்க விரும்புகிறேன்”.

இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்.

‘ஷகுந்தலம்’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே