உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி நிறுவனம் 1,100 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் 50 நாள்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நான்காம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், தொழிற்துறை இன்னமும் இயல்புநிலைக்குத் திரும்பவில்லை. அதனால் பல தொழிற்நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்துவருகின்றன.
அதனால், பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துவருகின்றன.
இந்தநிலையில், இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விகி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஸ்விகி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஸ்விகி நிறுவனத்துக்கு இது மிகவும் சோகமான தினங்களில் ஒன்று. எதிர்பாரதவிதமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.
பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு மூன்று மாத ஊதியம் வழங்கப்படும்.
மேலும், ஸ்விகி நிறுவனத்தில் பணியாற்றிய வருடங்களின் அடிப்படையில் ஒரு வருடத்துக்கு ஒரு மாத ஊதியம் வழங்கப்படும்.
பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கான மருத்துவ காப்பீடு இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சொமேட்டோ 13 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருந்தது.