நடிகர் சூர்யா நடித்துள்ள “காப்பான்” படத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

நடிகர் சூரியா நடித்துள்ள காப்பான் திரைப்படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பிரபல இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடித்த காப்பான்  திரைப்படம் வருகிற  20-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2016-ம் ஆண்டு ‘சரவெடி’ என்ற தலைப்பில் கதை எழுதி, அதை இயக்குனர் கே.வி.ஆனந்திடம்  விரிவாக கூறியதாக குறிப்பிட்டிருந்தார்.

எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும்போது வாய்ப்பு தருவதாக அவர் கூறியதாகவும், இந்த நிலையில், சரவெடி கதையை காப்பான் என்ற பெயரில் கே.வி.ஆனந்த் எந்த தகவலும் தெரிவிக்காமல் படமாக்கியுள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டியிருந்தார். 

எனவே காப்பான் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில்  மனுதாரரை எந்த காலத்திலும் தான் சந்தித்தது இல்லை என்றும், அடையாளம் தெரியாதவர்களிடம்  கதை கேட்பதில்லை என்பதோடு, சரவெடி படத்தின் கதை வேறு தன்னுடைய கதை வேறு இரண்டுக்கும் தொடர்பு இல்லை என்றும் இயக்குநர் கே.வி.ஆனந்த் சார்பில் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அற்பநோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பதால், காப்பான் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மனுவில் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி தள்ளுபடி செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே