சென்னையில் அதிமுக பேனர் சரிந்து இளம் பெண் பலி

சென்னையில் அனுமதியின்றி சாலையோரம் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் சரிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் உயிரிழந்தார்.

சென்னை பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் இளம்பெண் சுபஸ்ரீ இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சாலையோரம் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக கட்சி பேனர் ஒன்று திடீரென சரிந்து சுபஸ்ரீ மீது விழுந்தது.

இதில் நிலைதடுமாறிய சுபஸ்ரீ இரு சக்கர வாகனத்துடன் கீழே விழுந்தார். அப்போது பின்புறமாக வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி ஒன்று சுபஸ்ரீ மீது ஏறி இறங்கியது. இதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த பரங்கிமலை போக்குவரத்து போலீசார் உடனடியாக இளம் பெண்ணின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலையோரம் பேனர் வைக்கக் கூடாது என்ற உயர் நீதிமன்றம் தடை விதித்த போதும், ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில், பேனரால் இளம் பெண்ணின் உயிர் பறிபோன சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே