சென்னையில் விடிய விடிய கனமழை…!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்துள்ள நிலையில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடிமின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. நள்ளிரவு தொடங்கிய மழை அதிகாலையிலும் நீடித்தது.

தாம்பரம், பல்லாவரம், சேலையூர், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

பலத்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. காலையில் வேலைக்கு செல்பவர்களும், வியாபாரிகளும் மழையில் நனைந்தவாறே சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் ஆகிய இடங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடிய விடிய கனமழை பெய்தது. 

இதனிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

வங்க கடலில் மத்திய, மேற்கு பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக, ஆந்திர கடலோரத்தை கடந்து தெலங்கானா வரை நீண்டுள்ளதாகக் கூறிய அவர், இந்த சுழற்சி காரணமாக வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.

திருவள்ளூரில் இருந்து நாகை வரையுள்ள வடமாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, கடலில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, எண்ணூர் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் அபாய எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே