லாரி உரிமையாளர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம்!!

புதிய மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று ஒருநாள் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள அபராத தொகையை குறைக்க வலியுறுத்தியும், லாரி தொழிலை அரசு பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்த போராட்டத்திற்கு அனைத்திந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

இப்போராட்டத்திற்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன், சாலை விதிமுறை மீறல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என்றும், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், செப்டம்பர் ஆகிய மாதங்களில் தமிழகத்தில் உள்ள 43 சுங்கச்சாவடிகளில் 10 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடக்கும் வேலைநிறுத்ததிற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், இதனால் இந்தியா முழுவதும் 45 லட்சம் லாரிகள் ஓடாது என்றும், தமிழகத்தில் நான்கரை லட்சம் லாரிகளும், சேலம் மாவட்டத்தில் 38 ஆயிரத்து 390 லாரிகளும் இயங்காது என்றும் அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே