திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் காங்கயம் சாலை பாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகில் கணபதி ஸ்பின்னர்ஸ் எதிரில் எஸ்.சுரேஷ்குமார் (40) என்பவர் வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீட்டுக்கு வெள்ளக்கோவில் சீரங்கராயகவுண்டன்வலசு பாரதியார் நகரைச் சேர்ந்த ராஜ்கபூர் மனைவி கலைவாணி (35) என்பவர், கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு குடி வந்தார்.
அட்வான்ஸ் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து, வாடகை மாதம் ரூ.3,000 என பேசி முடிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் வாடகை கொடுக்காமல் இழுத்தடித்து, இதுவரை கடந்த ஒரு வருடமாக வாடகை கொடுக்கவில்லை. இதனால் வீட்டைக் காலி செய்யுமாறு உரிமையாளர் கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த அப்பெண் வீட்டின் கதவு, ஜன்னல்களை உடைத்து, எலக்ட்ரிக் பொருள்கள், வீட்டின் வெளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா போன்றவற்றைச் சேதப்படுத்தி தீ வைத்து விட்டுச் சென்று விட்டார். புகாரின் பேரில் அப்பெண் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து வெள்ளக்கோவில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.