நிறைவேறுமா ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு? – ஆர்சிபி-யின் வியூகமும் பின்புலமும்

ஐபிஎல் போட்டிகளில் ஆண்டுதோறும் கோப்பைக்காக ஆசைப்பட்டு, கடைசியில் தோல்வியை மட்டுமே தூக்கிச் செல்லும் அணிகளுள் ஒன்றாக இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. ‘ஈ சாலா கப் நம்தே’ என்ற உற்சாக வசனத்துடன், இந்த முறை கோப்பையை வெல்வோம் என்ற உறுதிமொழியுடன் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு, ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் மட்டுமே பரிசாக கிடைக்கிறது. இருந்தாலும் ஆண்டு தோறும் அந்த அணி தங்கள் வசனத்தை மாற்றமால் ‘ஈ சாலா கப் நம்தே’ என முழங்கி வருகிறது. அந்த அணியின் ரசிகர்களும், ‘குணா’ படத்தில் வரும் கமல் ‘அபிராமி அபிராமி’ என கூறுவது போல ‘ஈ சாலா கப் நம்தே’ என ஒவ்வொரு வருடமும் கூறுகின்றனர். ஆனால், ஒரு வருடமும் கோப்பையை வென்றபாடில்லை.

2008-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை மொத்தம் 13 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒருமுறையும், அதே ஹைதராபாத் அணி முன்னதாக ‘டெக்கான் சார்சஸ்’ என்ற பெயரில் இருக்கும்போது ஒருமுறையும் வென்றுள்ளது.

இந்த 12 ஆண்டுகளில் ஒரு முறை கூட கோப்பை வெல்லாத அணியாக கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இருக்கின்றன. இதில் பலமாக இருந்தும் பரிதாபமாக வெளியேறும் அணி பெங்களூர்தான்.

இத்தனைக்கும் இந்திய அணியின் கேப்டனாக வெற்றிகளை வாரி குவிக்கும் விராட் கோலிதான் பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்கிறார். ஆனாலும், கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ப்ளே ஆஃப் சுற்று வரை முன்னேறியது பெங்களூரு. அதிலும் 2019 ஐபிஎல் தொடரில் பெங்களூர் கடைசி இடத்தை பிடித்தது. அதுமட்டுமின்றி அந்த ஆண்டு பெங்களூர் அணியை கிண்டல் செய்தே ஐபிஎல் முழுவதும் மீம்ஸ்கள் பறந்தன.

குறிப்பாக, ‘ஈ சாலா கப் நம்தே’ என்ற வார்த்தை வைரலாகிப்போனது. அந்த வார்த்தையை வைத்தே ஏராளமான மீம்ஸ்கள் தயாரிக்கப்பட்டன. இவற்றிற்கு எல்லாம் முடிவு கட்டி, உண்மையிலேயே கோப்பை வென்று ‘ஈ சாலா கப் நம்தே’ என மைதானத்தில் கர்ஜிக்க வேண்டும் என்ற வெறியுடன் விராட் கோலி இருக்கிறார் எனத் தெரிகிறது.

இதற்காக அவர் பெங்களூர் அணியில் பெரும் மாற்றத்தை அதிரடியாக செய்திருக்கிறார். இந்த முறை ஏலத்திற்கு முன்பு பெங்களூர் அணியில் இருந்து ஆரோன் பின்ச், கிறிஸ் மோரிஸ், உமேஷ் யாதவ், ஷிவம் துபே, டேல் ஸ்டெய்ன் என 10 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் நடைபெற்ற ஏலத்தில் கிளென் மேக்ஸ்வெல், சச்சின் பேபி, ரஜத் பதிதர், முகமது அசாருதின், கயில் ஜேமிசன், டேனியல் கிறிஸ்டியன் உள்ளிட்ட 8 வீரர்களை ஏலத்தில் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜேமிசனை ரூ.15 கோடிக்கும், மேக்ஸ்வெல்லை ரூ.14.25 கோடிக்கும் வாங்கியது ஆர்சிபி.

இந்த புதிய வீரர்களைக் கொண்டு ஒரு பலமான அணியை கட்டமைக்க விராட் கோலி திட்டமிட்டிருக்கிறார். இவர்களுடன் அணியில் ஏற்கெனவே இருக்கும் விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், யஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி உள்ளிட்ட வீரர்களும் இணைந்தால், சிறப்பான அணியை தேர்வு செய்யலாம் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நிர்வாகமும் திட்டமிட்டிருக்கிறது. அத்துடன் உருவாகும் புதிய அணியை, இந்திய அணியைப் போன்றே வழி நடத்தி கோப்பையை வெல்லலாம் எனவும் கோலி திட்டமிட்டுள்ளார்.

இவ்வாறாக விராட் கோலியின் திட்டங்கள் நிறைவேறி, அவர் இந்த முறையாவது கோப்பை வெல்ல வேண்டும் என்பதே ‘ஈ சாலா கப் நம்தே’ எனக் கூறிக்கொண்டிருக்கும் அவரது ரசிகர்களின் கனவாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே