6 பதக்கங்களை வென்ற அஜித்: சீமான் வாழ்த்து

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற அஜித்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

46-வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சுமார் 900க்கும் மேற்பட்டோர் இந்தப் போட்டியில் பங்கேற்றார்கள்.

60க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பல்வேறு துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்றன. இதில் சென்னை ரைஃபிள் கிளப் அணி பல்வேறு பதக்கங்களைக் குவித்தது. சென்னை ரைஃபிள் கிளப்பின் உறுப்பினரான நடிகர் அஜித் 6 பதக்கங்களை வென்றார். அவருக்கு கிளப்பின் இதர உறுப்பினர்கள் தங்களுடைய பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

அஜித் 6 பதக்கங்கள் வென்றிருப்பதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கி சுடுதல் முதல்நிலைப் போட்டியில் ‘சென்னை ரைஃபிள் கிளப்’ அணிக்காக தம்பி அஜித் குமார் பங்கேற்று 6 பதக்கங்களை வென்ற செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

தம்பி அஜித் திரைப்பட நடிகராக மட்டுமின்றி, துப்பாக்கி சுடுதல், இரண்டு, நான்கு சக்கர வாகனப் பந்தயங்களில் பங்கெடுத்தல், நவீன எந்திரப் பொறிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பன்முகத் திறமைகளைக் கொண்டவராக விளங்குவது பாராட்டுக்குரியது.

இன்றைய இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் தனது தனித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கேற்ப திகழும் தம்பி அஜித் தொடர்ந்து மேலும் பல சாதனைகளைப் புரிய எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்”.

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே