கடன் வாங்கி வீரர்களுக்கு ஊதியம் கொடுத்தோம்; கரோனா மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டது: மே.இ.தீவுகள் வாரியத் தலைவர் வேதனை

கரோனா வைரஸ் பாதிப்பு எங்களை மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டது. கடன் வாங்கித்தான் வீரர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் கொடுத்தோம் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் ரிக்கி ஸ்கிரிட் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கயானா கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஆனந்த் சனாசிக்கு எதிராக, மீண்டும் தலைவர் பதவிக்காக தற்போது ரிக்கி ஸ்கிரிட் போட்டியிடுகிறார்

மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் நிதி நிலைமை குறித்து ரிக்கி ஸ்கிரிட் கூறுகையில், “மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நான் பொறுப்பேற்றபின், வாரியத்தின் நிதிநிலை ஓரளவுக்கு உயர்ந்தது. ஆனால், கரோனா வைரஸ் பாதிப்புக்குப்பின் அனைத்தும் மாறிவிட்டன.

இப்போது எங்கள் முன் இருக்கும் பிரச்சினை என்பது, எதிர்காலத்தில் எங்களுக்குப் பணம் தேவை. எதிர்கால வருமானத்தை எதிர்பார்த்து தற்போது கடன் வாங்கி செலவு செய்கிறோம். தற்போது மே.இ.தீவுகள் வாரியத்துக்கு 2 கோடி டாலர் (ரூ.144 கோடி) கடன் இருக்கிறது. எங்கள் தேவைக்குக் கடன் பெற்று வருமானம் வந்தபின் திருப்பிக் கொடுத்து வருகிறோம்.

எங்கள் வாரியம் அனுபவிக்கும் கஷ்டங்கள் மோசமானவை. நாங்கள் கடன் பெற்றுச் செலவு செய்வது என்பது குறுகிய காலத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும் என்பது எங்களுக்குப் புரிகிறது. ஆனால், பணப்புழக்கம் இல்லாதது கடினமாக இருக்கிறது.

கரோனா காலத்தில் மே.இ.தீவுகள் வீரர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் கொடுக்கப் பணமில்லை. ஊழியர்களுக்கு 50 சதவீதம் ஊதியத்தைக் குறைத்துக்கொண்டு வெளியில் கடன் பெற்றுத்தான் ஊதியம் கொடுத்தோம்.

நாங்கள் லாபம், நஷ்டம் போன்றவற்றில் கவனம் செலுத்துவதைவிடத் தேவையில்லாத செலவுகள் அனைத்தையும் குறைத்துக் கொண்டோம். அடுத்த 2 ஆண்டுகளில் எங்களின் கடன் மூன்றில் ஒரு பகுதி குறையும் என நம்புகிறோம்.

எங்களுக்கு இருக்கும் கடமைகளை நிறைவேற்றுவது, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிக்கல் இருக்கிறது. கடந்த காலத்தில் எங்களின் பெரும்பகுதியான கடமைகளை நிறைவேற்றவில்லை. இந்தக் கரோனா பெருந்தொற்று ஒவ்வொன்றையும் சிதறடித்துவிட்டது. அதே நேரத்தில் எது எங்களுக்குத் தேவையோ அதில் மட்டும் கவனம் செலுத்தும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. எங்கள் சூழலைப் புரிந்துகொண்டு அனைவரும் 50 சதவீதம் ஊதியக் குறைப்புக்கு ஒத்துழைத்துள்ளார்கள்”.

இவ்வாறு ரிக்கி ஸ்கிரிட் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே