அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கணவனை கட்டிப்போட்டு காதில் பூச்சி மருந்து ஊற்றி மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜசேகர்.
இவர் தினம்தோறும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து மது வாங்குவதற்காக மனைவி மற்றும் தாயை அடித்து மிரட்டி பணம் கேட்டு செல்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வந்த ராஜசேகர் தனது மனைவி மற்றும் தாயை குடிபோதையில் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனால் கோபமடைந்த தாய் செல்வி, மனைவி சுகுணா ஆகியோர் சேர்ந்து ராஜசேகரை வீட்டில் கட்டிவைத்து அவரது காதில் வயலுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றி கொலை செய்தாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் ராஜசேகர் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் வீட்டிலிருந்த ராஜசேகரின் தாயார் செல்வி, மனைவி சுகுணா, மகன் ரவிவர்மன், ராஜசேகரின் தம்பி மனோகரன், உள்ளிட்ட அனைவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மதுபோதையில் குடும்பத்தினரை கொடுமைபடுத்தியவரை அவது தாயார் மற்றும் மனைவியே கொலை செய்த செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.