ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சுபஸ்ரீயின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியானதற்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க கோரி அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ கடந்த மாதம் 12ஆம் தேதி பள்ளிக்கரணை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவர் மீது பேனர் விழுந்தது. இதனால் சாலையில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்த போது, லாரி ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனிடையே தமக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவரது தந்தை ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் சட்டவிரோதமாக பேனர் வைக்கவோ, தடுக்கவோ நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான் தமது மகள் இறந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமது மகளின் மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டவிரோதமாக பேனர் வைப்பதை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டுவர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை வேறு யாருக்கும் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே மனு தாக்கல் செய்ததாக சுபஸ்ரீயின் தந்தை ரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், சில அதிகாரிகளின் அலட்சியமே தமது மகளின் மரணத்திற்கு காரணம் என்றும், நீதிமன்றத்தின் மீது தமக்கு நம்பிக்கை உள்ளது எனவும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே