மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இடையே நடந்த உரையாடலை மொழிபெயர்த்த தமிழர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி இடையே மாமல்லபுரத்தில் அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக இரு தலைவர்களும் குறிப்புகள் ஏதும் இன்றி உரையாடுவர்.
மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிட்டவாறு இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, அதிகாரிகள் இருவர் உடனிருந்தனர்.
அதில் ஒருவர் சீன அதிகாரி.
இந்திய அதிகாரியாக செயல்பட்டவர் தமிழகத்தைச் சேர்ந்த மதுசூதனன் ரவீந்திரன்.
இவர் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் உறையைக் கூர்ந்து கவனித்து, அவர்களுக்கு மொழிபெயர்ப்பு செய்யும் நடவடிக்கை கவனத்தை ஈர்த்தது.
மேலும் தமிழர் என்பதால் தமிழக பாரம்பரியத்தை எடுத்துரைப்பது எளிதாகவும் அமைந்தது.
இரு தலைவர்களுக்கு உறையை மொழிபெயர்த்த மதுசூதனன், சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தின் முதன்மை செயலராக உள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு முடித்த மதுசூதனன் கடந்த 2007ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு பணியில் சேர்ந்தார்.
சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூன்றாம் நிலை செயலராக முதலில் பணியமர்த்தப்பட்டார். பின்னர் சான் பிரான்சிஸ்கோ-வுக்கு மாற்றப்பட்ட அவர், 2013ஆம் ஆண்டு மீண்டும் சீனாவில் பணியமர்த்தப்பட்டார்.
நெடுங்காலம் சீனாவிலேயே வசித்து வருவதால் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியான மாண்டரின் உள்ளிட்ட மொழிகளை நன்கு கற்றுத் தேர்ந்தார்.
இதன் காரணமாக கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி இடையிலான சந்திப்பின் போது மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டார்.