இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமாங்கிற மாதிரி கையை கட்டிகிட்டு நின்னா என்ன அர்த்தம்?

துக்ளக் தர்பார் படத்தின் புதிய புகைப்படங்களை பார்த்த பார்த்திபன் விஜய் சேதுபதியின் மாஸ்டர் பிளான் என்னவென்று கேட்டுள்ளார்.
புதுமுகம் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அந்த போஸ்டரில் விஜய் சேதுபதி வில்லத்தனமாக சிரிப்பதும், சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டிருப்பதுமாக இருக்கிறார்.
போஸ்டரை பார்த்த ரசிகர்களோ, படத்தில் பார்த்திபன் வேறு இருக்கிறார். ஆனால் போஸ்டரை பார்த்தால் விஜய் சேதுபதி தான் ஹீரோவும், வில்லனும் போன்று என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் துக்ளக் தர்பார் படத்தின் மேலும் சில புகைப்படங்களை இன்று வெளியிட்டுள்ளார்கள்.

வெள்ளை வேட்டி, சட்டையில் விஜய் சேதுபதி பவ்யமாக வணக்கம் சொல்லும் புகைப்படத்தை பார்த்தால் ஏனோ என்.ஜி.கே. சூர்யா நினைவுக்கு வருகிறார். மற்றொரு புகைப்படத்தில் பார்த்திபன் விஜய் சேதுபதியை சீரியஸாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு புகைப்படத்தில் ஆதரவாளர்கள் கோஷமிடுவது போன்று கைகளை உயர்த்த விஜய் சேதுபதி கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டு கெத்தாக போஸ் கொடுத்திருக்கிறார்.
விஜய் சேதுபதி நிஜத்தில் அரசியல் கட்சி துவங்கினால் அவர் அலுவலகத்தில் பெரிய ஃபிரேம் போட்டு வைக்கும் வகையில் இருக்கிறது அவர் கையை அசைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம். சும்மாவே விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களாகத் தான் தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் துக்ளக் தர்பார் பட புகைப்படங்களை பார்த்தால் இது அவர் இதுவரை நடித்திராத கதாபாத்திரம் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.
ஹீரோவாக நடிக்கச் சொன்னாலும், வில்லனாக வந்து மிரட்டச் சொன்னாலும் சந்தோஷமாக நடிப்பார் விஜய் சேதுபதி. அப்படி இருக்கும் நிலையில் துக்ளக் தர்பாரில் அவர் வில்லத்தனம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இந்நிலையில் துக்ளக் தர்பார் படத்தின் புதிய புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு பார்த்திபன் தனக்கே உரிய ஸ்டைலில் கூறியிருப்பதாவது,

பார்த்திபன்: நானும் ரவுடி தான்,நீயும் ரவுடி தான். இன்னைக்கு உன் துக்luck தர்பார் எவ்வளவு பெரிய Level-ல இருக்குன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சுகிட்டு”இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா”ங்கிற Range-க்கு பவ்யமா கையை கட்டிகிட்டு நின்னா என்ன அர்த்தம்? உன் MASTER plan தான் என்ன? என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக பார்த்திபன் துக்ளக் தர்பாரின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு கூறியிருந்ததாவது,

நண்பர் விஜய் சேதுபதிக்கு DOUBLE வெற்றியாகவும்,நாணயமிக்க லலித் அவர்களுக்கு மிக்க நாணயங்களும்,
இயக்குனருக்கு கோடிகள் கூடுதலாகவும்,(இச்சமயத்தில் குறைக்கச் சொல்லி சங்கங்கள் சொல் மீறியும்)உடன் நடிப்போரும் பேரும் பெற வாழ்த்துக்கள்! என்று தெரிவித்திருந்தார்.
பிற ஆண்டுகளை போன்றே இந்த ஆண்டும் கை நிறைய படங்கள் வைத்துக் கொண்டு கோலிவுட்டின் பிசியான நடிகராக இருக்கிறார் விஜய் சேதுபதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படத்தை தான் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மாஸ்டர் படத்தை கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டார்கள். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. மாஸ்டர் படத்தில் கொடூரமான வில்லனாக, துளி கூட நல்லவன் இல்லாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அண்மையில் விஜய் சேதுபதி தெரிவித்தார்.

லாக்டவுனால் பட வேலைகள் இல்லாமல் வீட்டில் இருக்கும் விஜய் சேதுபதி தன் படங்கள், கெரியர் பற்றி அவ்வப்போது சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே