இந்து மதத்தில் உள்ள தீண்டாமைக் கொடுமை தாங்காமல் இஸ்லாமை தழுவினோம் – ராஜ்கிரண்

இந்திய குடியுரிமை சட்டத் திருத்தம் பற்றி திரைப்பட நடிகர் ராஜ்கிரண் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார்.

அதில் தன்னுடைய தாய், தந்தை, மூதாதையர்களின் குலம் பற்றி கூறியிருக்கிறார்.

இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சி என்பது காலம் காலமாக புளித்துப் போன விஷயம் எனக் குறிப்பிட்டிருக்கும் அவர், ஏதோ இஸ்லாமியர்கள் அரபு நாடுகளிலிருந்து வந்தவர்கள் போலவும், பாகிஸ்தான் தான் அவர்களது நாடு என்பது போலவும் தவறான போலியான நச்சுக் கருத்துக்களை காலம் காலமாக விதைத்து வருகின்றனர் என பதிவு செய்திருக்கிறார்.

இந்த பொய் பிரச்சாரங்கள் ஒரு காலத்திலும் செல்லுபடியாகாது என கூறி இருக்கும் ராஜ்கிரண் கூடவே தன் மூதாதையர்கள் பற்றி குறிப்பிடும் போது தன் தகப்பனாரின் மூதாதையர்கள் சேதுபதி சீமையின் மறவர் குலம் என்றும் தாய்வழி மூதாதையர் மீனவ குலம் என்றும் கூறியிருக்கிறார்.

இங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் இந்துக்களின் ரத்த சொந்தம் என சொல்லும் அவர், இந்து மதத்தில் உள்ள தீண்டாமைக் கொடுமைகள் தாங்காமல் சுயமரியாதையோடு வாழவே இஸ்லாமைத் தழுவியதாக வேதனையுடன் தெரிவிக்கிறார்.

ஒவ்வொரு மனிதனும் தனக்கு பிடித்த வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது அவரவருடைய அடிப்படை சுதந்திரம்.

இதை இந்திய அரசியல் சாசன சட்டம் உறுதி செய்திருக்கிறது என்ற தனது அழுத்தமான கருத்தையும் வெளியிட்டு இருக்கிறார்.

ஒரே தாய்க்குப் பிறந்த பிள்ளைகள் அவரவருக்கு பிடித்தமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில்லையா அது போலதான் இதுவும் என தனது பாணியிலேயே விளக்கமும் சொல்லி இருக்கிறார் அவர்.

இறுதியாக பேதங்கள் அற்றதே பெருவாழ்வு அதில் மனித நேயமே மாண்பு என அழகாக தன் எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் ராஜ்கிரண்.

ரஜினி போன்ற நடிகர்கள் இவ்விஷயத்தில் கருத்து கூறாத நிலையில், ராஜ்கிரண் போன்ற நடிகர்கள் தங்கள் கருத்துக்களையும் அரசியல் நிலைப்பாட்டையும் துணிச்சலாக பேசுவது பாராட்ட வேண்டிய விஷயம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே