தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வி.பி. துரைசாமியை நீக்கி அக்ககட்சி தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வி.பி.துரைசாமி கடந்த சில தினங்களுக்கு முன் ,தமிழக பா.ஜ. தலைவரான எல்.முருகனை திடிரென சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு பாஜக அலுவலகமான தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த வி.பி.துரைசாமி, கட்சியில் தனக்கும் தனது பதவிக்கும் சரியான மரியாதை இல்லை.
கட்சி பதவியை பறிக்க ஸ்டாலின் முடிவு செய்துவிட்டதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் தான் பா.ஜ.,தலைவர் சந்திப்பு குறித்து ஸ்டாலின், வி.பி.துரைசாமியைத் தொடர்புகொண்டு கேட்ட போது சரியான பதில் இல்லை என கூறப்பட்டு வந்த நிலையில், இன்று துணை பொதுச்செயலாளர் பதவியை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பறித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து தி.முக. துணை பொதுச்செயலாளராக அந்தியூர் செல்வராஜ் நியமிக்கப்பட்டார்.
இது தொடர்பாக வி.பி .துரைசாமி கூறியது, பதவியை பறித்தது நான் எதிர்பார்த்த ஒன்று தான். எனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மூன்று நாட்களில் அறிவிப்பேன்.
அதுவரை தி.மு.க.வில் இருப்பேன் என்றார்.
பா.ஜ. தலைவர் முருகனை சந்தித்தன் பின்னணி குறித்தும் கட்சி வட்டாரங்கள் கூறுகையில், சமீபத்தில் தமிழகத்தில் காலியாக இருந்த ராஜ்யசபா பதவிக்கான தேர்தலில் தனக்கு எம்.பி. பதவி கிடைக்காததால் பா.ஜ.விற்கு தாவ வி.பி. துரைசாமி திட்டமிட்டதாகவும். இதையடுத்து முருகனை சந்தித்தார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.