கொரோனா தடுப்பூசியை சோதனை முறையில் போட்டுக்கொண்ட தன்னார்வலர் உயிரிழப்பு..!!

பிரேசிலில் கொரோனா தடுப்பு ஊசியை சோதனை முறையில் போட்டுக்கொண்ட தன்னார்வலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் கடுமையாக போரோடுகிறது.

மேலும் கொரோனா பரவலை தடுக்கவும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அதனொரு கட்டமாக கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

மேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. 

இந்த பரிசோதனையில் ஆயிரக்கணக்கான தன்னாவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரேசில் நாட்டில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

28 வயதான அந்த தன்னார்வலர் உயிரிழந்ததற்கான காரணங்கள் குறித்து விசாரனை நடத்த பிரேசில் சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தடுப்பூசி பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே