இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் பல்லாயிரம் அழகிகளை உலக வரலாறு பார்த்திருக்கின்றது. ஆனால் கிளியோபாற்றா போன்ற வலிமையான அரசிகள் வெகுசிலரே..!!

கிளியோபாற்றா – இந்தப் பெயரைக் கேட்டவுடன் நம் அனைவருக்கும் உடனே நினைவுக்கு வரும் இரண்டு விஷயங்கள்.

1.   கருப்பு அழகி.

2.   அழகுக்காக கழுதைப் பாலில் குளித்தவள்.

இது இரண்டைத் தவிர கிளியோபாற்றா பற்றி நாம் அறிந்த செய்திகள் மிகச் சொற்பம்.

வில்லியம் சேக்ஸ்பியரின் வரிகளில் வர்ணிக்கப்பட்ட கிளியோபாற்றாதான் நாம் அதிகம் அறிந்த கிளியோ பாட்ரா.

ஆனால் இவள் வரலாற்றில் வாழ்ந்த உண்மையான கிளியோபாற்றாவுக்கு பிற்கால சமூகம் அணிவித்த ஒரு முகமூடி மட்டுமே என்பதுதான் உண்மை.

ஒரு நபரை விஷம் கொடுத்துதான் கொல்ல வேண்டுமென்ற அவசியம் இல்லை. வெல்லம் கொடுத்தும் கொல்லலாம்.

கிளியோபாற்றாவின் உண்மையான புகழ் அவளது அறிவும் ஆளுமையுமே ஆகும். அவை ‘அழகு’ என்ற வெல்லத்தை அதிகம் திணித்துக் கொல்லப்பட்டன.

எகிப்தின் அரசியான கிளியோபாற்றா எகிப்திய மரபைச் சேர்ந்தவள் கிடையாது.

இவளது மரபைப் பற்றி அறிந்து கொள்ள நாம் சற்று பின்னோக்கி அலெக்சாண்டரின் காலத்திற்குச் செல்ல வேண்டும்.

உலகையே வெற்றி கொள்ளப் புறப்பட்ட கிரேக்கப் பேரரசரான அலெக்சாண்டர் மறைந்த பின்னர் அவரது தளபதி தாலமி ஒரு பேரரசராக எகிப்தில் ஆட்சி செய்யத் துவங்கினார்.

தாலமியின் வழியில் எகிப்தை ஆண்ட அவரது வாரிசுகள் இரண்டாம் தாலமி, மூன்றாம் தாலமி என்று தொடர்ச்சியாகத் தங்களுக்குப் பெயரிட்டுக் கொண்டனர்.

அரசிகளுக்கும் கிளியோபாற்றா என்ற பெயர் அடுத்தடுத்து வைக்கப்பட்டது.

அந்த மரபில் ஏழாவதாக வந்தவள்தான் நாம் அறிந்த கிளியோபாற்றா.

தாலமி குடும்ப வாரிசுகள் தொடர்ந்து பல ஆண்டுகள் எகிப்தை ஆண்டாலும், எப்போதும் தங்களை கிரேக்கர்களாகக் கருதுவதையே பெருமையாக எண்ணினர்.

கிரேக்க மரபில் வந்த பல தாலமி அரசர்களுக்கு தங்கள் மக்களின் மொழியான எகிப்திய மொழி தெரியாது.

அதே சமயம் அவர்களின் ஆட்சி மொழியான கிரேக்கம் மக்களுக்குத் தெரியாது.

இந்த நிலையில் 12ஆம் தாலமியின் மகளாக நாமறிந்த கிளியோபாற்றா பிறந்தாள்.

இயல்பிலேயே மக்களைப் பற்றிய சிந்தனை கொண்ட அவள், மக்களின் குறைகளை அறிய அவர்களின் எகிப்திய மொழியை கற்றுக் கொண்டாள்.

எகிப்திய மொழி கற்ற முதல் கிரேக்கப் பேரரசி கிளியோபாட்ராதான்.

அதற்கு முன்னர் அரச மரபில் வந்த எந்தப் பெண்ணுக்கும் எகிப்திய மொழி தெரியாது.

எகிப்திய மொழி தவிரவும் வேறு 10 மொழிகளி லும் கிளியோபாட்ராவுக்கு சரளமாகப் பேசத்தெரியும்.

அதனால்தான் உலக வரலாற்றில் அதிக பேச்சாற்றல் கொண்டவளாக கிளியோபாட்ரா போற்றப்படுகிறாள்.

எகிப்திய மக்களின் மீது கொண்ட நேசத்தினால் தன்னை,  மக்கள் நேசிக்கும் எகிப்திய தேவதை இசிஸ்ஸின் மறுபிறவி என்று கிளியோபாட்ரா அழைத்துக் கொண்டாள்.

இதனால் எகிப்திய மக்கள் அவளை ஒரு அரசி என்பதையும் தாண்டி ஒரு தேவதையாகவே கொண்டாடினர்.

தனது 14ஆவது வயதில் கிளியோபாட்ரா தன் தந்தை 12ஆம் தாலமியுடன் சேர்ந்து எகிப்தின் ஆட்சியைப் பகிர்ந்து கொண்டாள். அவளது 18ஆவது வயதில் தந்தை இறந்தார்.

தாலமி இறப்பதற்கு முன் “கிளியோபாற்றாவுக்கும், அவள் தம்பி ஏழாவது தாலமியும் திருமணம் செய்து கொண்டு நாட்டை ஆள வேண்டும்.” என்று அறிவித்தார்.

தாலமி வம்சத்தில் பிற வம்சத்தின் ரத்தக் கலப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இத்தகைய திருமணங்கள் அக்காலத்தில் நடைபெற்றன.

தந்தையின் விருப்பப்படி கிளியோபாற்றா தன் தம்பியை மணந்து கொண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றாள். அப்போது கிளியோபாட்ராவுக்கு வயது 16 .

கணவனாகி விட்ட தம்பிக்கு வயது 10 .

அமைச்சர்களும் பிரபுக்களும் தாலமியை தங்கள் கைப்பாவையாக்கிக் கொண்டனர்.

அவர்களின் தூண்டுதலால் கிளியோபாற்றாவை தாலமி விரட்டி அடித்து விட்டு ஆட்சியை கைப்பற்றி கொண்டான்.

கிளியோபாற்றா – சீசர்

சிரியாவுக்கு தப்பி ஓடிய கிளியோபாற்றா, ஆட்சியை மீண்டும் பிடிக்கப் படை திரட்டி வந்தாள்.

இந்த சமயத்தில் ரோம் நாட்டை ஆண்டு வந்த ஜூலியர் சீசர் (கி.மு 63 – 14 )எகிப்து மீது படையெடுத்தார்.

அவரைக் கிளியோபாற்றா சந்தித்து ஆதரவு கேட்டாள்.

கிளியோபாற்றாவின் அழகில் மயங்கிய சீசர், அவளுக்கு உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தார். சீசருக்கும், தாலமிக்கும் நடந்த மோதலில் தாலமி இறந்து போனான்.

கிளியோபாற்றாவை எகிப்தின் அரசியாக்கிய சீசர், அவளுடனேயே வாழ்ந்து வந்தார்.

இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் சிசேரியன்.

சில காலத்துக்கு பின் கிளியோபாற்றாவையும் மகனையும் அழைத்துக்கொண்டு ரோமாபுரிக்குச் சென்றார் ஜூலியர் சீசர்.

சீசரின் நண்பனாக இருந்த புரூட்டஸ், வேறு சில சதிகாரர்களுடன் சேர்ந்து சீசரை கோடாரியால் குத்தி படு கொலை செய்தான்.” புரூட்டஸ்!நீயுமா!” என்று கூறிய படி உயிர் துறந்தார், சீசர்.

இறந்த போது சீசருக்கு வயது 49.

ரோமாபுரியின் பாராளுமன்ற மண்டபத்தில் இந்தப் படுகொலை நடந்தது.

சீசரின் எதிர்பாராத மரணத்தால் மனம் உடைந்த கிளியோபாற்றா, எகிப்துக்கு திரும்பி சென்று, ஆட்சிப் பொறுப்பு ஏற்றாள்.

கிளியோபாற்றா – அன்டோனி

சீசரின் அன்புக்குரிய தளபதி ஆண்டனி, பொதுமக்களின் ஆதரவோடு சதிகாரர்களை நாட்டை விட்டு விரட்டி அடித்தான்.

இந்தச் சமயத்தில், சீசரின் வளர்ப்பு மகனும், 19 வயது இளைஞனுமான ஆக்டோவியஸ் ரோமாபுரிக்கு வந்து சேர்ந்தான்.

அவனும் ஆண்டனியும் நாட்டை ஆண்டு வந்தனர்.

சீசரை கொன்ற புரூட்டஸ், கேசியஸ் ஆகியோருடன் பிலிப்பி என்ற நகரில் நடத்திய போரில், ஆண்டனியும், ஆக்டோவியசும் வெற்றி பெற்றனர்.

அதைத் தொடர்ந்து புரூட்டசும், கேசியசும் தற்கொலை செய்து கொண்டனர். ரோமாபுரியின் ஆதிக்கத்தில் அடங்கிய எகிப்துக்கு ஆண்டனி சென்றான்.

அங்கு கிளியோபாட்ராவும், ஆண்டனியும் முதன் முதலாக சந்தித்தனர்.

கண்டதும் காதல் கொண்டனர்.

கிளியோபாற்றாவின் அழகில் அடிமையான ஆண்டனி, எகிப்தின் தலைநகர் அலெக்சாண்டரியாவில் அவளுடன் வாழத் தொடங்கினான்.

ஆண்டனியின் உல்லாச வாழ்க்கை பற்றிய செய்திகள் ரோமாபுரியில் பரவின.

அதைக் கேட்டு ஆண்டனியை மக்கள் வெறுக்கத் தொடங்கினர்.

ஆக்டோவியசின்(Octavian)செல்வாக்கு பெருகியது.

ரோமில் தோன்றிய நெருக்கடியை அறிந்த ஆண்டனி, அந்த நகருக்கு திரும்பிச் சென்றான். ஆக்டோவியசுடன் நட்பை புதுபித்துக் கொண்டான்.

ஆயினும் ஆக்டோவியசின் செல்வாக்கு வளர்வதைக் கண்டு மனம் புழுங்கிய ஆண்டனி எகிப்துக்கு திரும்பி சென்றான்.

கிளியோபாற்றாவுடன் அவனது காதல் வாழ்க்கை மீண்டும் தொடங்கியது. இதனால் ஆண்டனி-ஆக்டோவியஸ் இடையிலான பகை முற்றியது.

ஜூலியர் சீசருடன் முன்பு கிளியோபாற்றா வாழ்ந்தாள் என்றாலும் அவள் மிகுந்த காதல் கொண்டிருந்தது ஆண்டனியிடம் தான். இருவரும் உயிருக்கு உயிராக நேசித்தனர்.

இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தன. இந்த நிலையில் எகிப்தில் ஆண்டனி அரச தர்பார் நடத்தினான்.

தனக்கும் கிளியோபாற்றாவுக்கும் பிறந்த குழந்தைகளுக்கும், சீசருக்கும் அவளுக்கும் பிறந்த சிசெரியனுக்கும் ஆசிய நாடுகளின் அரசுரிமையை அளிப்பதாக அறிவித்தான்.

ஆண்டனியின் இந்த அறிவிப்பு ரோமாபுரியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

கிளியோபாற்றாவுடன் சேர்ந்து எகிப்து பேரரசை உருவாக்க ஆண்டனி முயற்சிப்பதாகவும், இது ரோமாபுரிக்கு பெரிய ஆபத்தை உண்டாக்கும் அன்று ரோமானியர்கள் கருதினர்.

இதைத் தொடர்ந்து எகிப்து மீது ஆக்டோவியஸ் கி.மு 31 இல் படைஎடுத்தான்.

ஆகடியம் என்ற இடத்தில் ஆக்டோவியசின் கடற்படையும் ஆண்டனியின் கடற்படையும் மோதின. இதில் ஆண்டனியின் படைகள் தோற்றன.

ஆக்டேவியசுடன் சமாதானம் செய்துகொள்ள ஆண்டனி முயன்ற வேளையில், கிளியோபாற்றா தற்கொலை செய்து கொண்டதாக பொய் வதந்தி பரவியது.

அதை உண்மை என்று கருதிய ஆண்டனி “கிளியோபாற்றா இல்லாமல் நான் உயிர் வாழ்வதா!”என்று கதறியபடி ஒரு கோடாரியால் தன் நெஞ்சை பிளந்து உயிரை விட்டான்.

ஆண்டனியின் மரணம் பற்றித் தகவல் கிடைத்த கிளியோபாற்றா மனம் உடைந்தாள்.

ஆண்டனியை பிரிந்து உயிர் வாழ அவள் விரும்பவில்லை.

அரசி போல தன்னை அலங்கரித்து கொண்டாள். மிகக் கொடிய விஷப் பாம்புகளைக் கொண்டு வரச்செய்து தன் உடல் மீது பரவவிட்டாள்.

பாம்புகள் அவளை கொத்தின. உடம்பில் விஷம் பரவ, அணு அணுவாக உயிர் விட்டாள் கிளியோபாற்றா.

தனது 14 வயதில் இருந்து எகிப்திலும் பின்னர் ரோமிலும் தனது அறிவினால் ஆதிக்கம் செலுத்தத் துவங்கிய கிளியோபாற்றா இறக்கும் போது அவரது வயது 39.

ஏழாவது கிளியோபாட்ராவின் முழுமையான பெயர் ‘கிளியோபாட்ரா திய பிலோபேட்டர்’ இதன் அர்த்தம் தந்தையின் அன்பாக வாழ்ந்த பெண்கடவுள் என்பது. (thea – goddess; philopator – father’s love)

தனது பெயரைப் போலவே கிளியோபாட்ராவும் ஆண்களின் அன்பாகவும் புகழாகவுமே கடைசிவரை வாழ்ந்தாள்.

பெண்களுக்கு அன்றைய சமூகத்தினால் மறுக்கப்பட்ட பெரிய அதிகாரங்கள் அனைத்தையும் அவர் ஆண்களை முன்னிறுத்தி தன்வசமாக்கினாள்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு கிளியோபாட்ரா மக்களால் நினைவுகூறப் பட்டதற்குக் காரணம் அவளது ஆளுமைகள்தான்.

அவள் அழகு குறித்த சிந்தனைகள் சமீப காலத்தில்தான் தோன்றின.

காதல் கவிதைகளுக்குப் பெயர் போன வில்லியம் ஷேக்ஸ்பியர், கிளியோபாற்றாவின் வம்சத்தில் ஆப்ரிக்க ரத்தமும் உண்டு என்பதை அடிப்படையாகக் கொண்டு அவள் நிறத்தை ’டானி’ (tawny – அதாவது பழுப்பும் மஞ்சளும் கலந்தநிறம்) என்று வர்ணிக்க, பெரிய ஆளுமைகளைக் கொண்ட அவளைக் கருப்பழகி என்று கொண்டாடியே  அவள் புகழை விழுங்கியது ஆணாதிக்க நிழல்.

உண்மையில் கிளியோபாற்றா என்ன நிறம் என்று இந்த உலகத்திற்கு இன்னும் தெரியாது, இது குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், எந்த ஆய்வுகளும் இது தொடர்பான உறுதியான முடிவைக் கொடுக்கவில்லை.

ஆனால் எல்லா ஆய்வுகளும் கிளியோபாற்றாவின் ஆளுமையை மட்டும் உறுதி செய்கின்றன.

இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் பல்லாயிரம் அழகிகளை உலக வரலாறு பார்த்திருக்கின்றது. ஆனால் கிளியோபாற்றா போன்ற வலிமையான அரசிகள் வெகுசிலரே..!!

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே