தெலங்கானா போக்குவரத்துக்கழக ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது

ஹைதராபாத்தில் தெலங்கானா போக்குவரத்துக்கழக ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.

சம்பள உயர்வு, போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைத்து, தங்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும், ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 26 கோரிக்கைகளை முன்வைத்து தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள், கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், 48 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று தலைமைச் செயலகத்தை நோக்கி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பேரணியாகச் சென்றபோது அவர்களை போலீசார் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடந்த கல்வீச்சில் காவல்துறை அதிகாரிகள் 7 பேர் காயமடைந்தனர்.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே