மங்காத்தா படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க விரும்பிய விஜய்

மங்காத்தா படம் பார்த்துவிட்டு தனக்கும் ஒரு கதை தயார் செய்யும் படி விஜய் கூறினார் என வெங்கட் பிரபு பேட்டி அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது டாப் ஹீரோக்களாக இருப்பவர்கள் தல அஜித் மட்டும் தளபதி விஜய். ஒரு கால கட்டத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இருவரும் போட்டியாளர்களாக கருதப்பட்டனர். அது போல தற்போது விஜய் மற்றும் அஜீத் போட்டியாளர்களாக கருதப் படுகின்றனர். அவர்கள் நண்பர்களாக இருந்தாலும் அவர்களது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர்.
அஜித் மங்காத்தா படத்தின் ஷூட்டிங்கில் இருந்த போது விஜய் அவரை சந்திக்க வந்தார். அப்போது விஜய் அஜித்துக்கு ஒரு வாட்ச் பரிசாக அளித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி இருந்தன. 2011-ல் நடந்த இந்த சந்திப்பின் போது விஜய் மற்றும்அவரது குடும்பத்திற்கு அஜித் தன்னுடைய ஸ்பெஷல் பிரியாணி செய்து கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது கடந்த பல வருடங்களாகவே அனைவருக்கும் தெரிந்த தகவல் தான். தற்போது புதிய தகவல் என்னவென்றால் மங்காத்தா படம் ரிலீஸான பிறகு விஜய் அதை பார்த்த போது அவருக்கு அது மிகவும் பிடித்து விட்டதாம். அதற்கு பிறகு வெங்கட் பிரபு தன்னுடைய வீட்டுக்கு அழைத்து பேசியுள்ளார். அந்த சந்திப்பு பற்றி வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு ஆன்லைன் பேட்டியில் கூறியிருப்பதாவது..

“மங்காத்தா படத்திற்கு பிறகு விஜய் என்னை அவர் வீட்டிற்கு டின்னருக்கு வர வைத்து ஒரு பெரிய ட்ரீட் கொடுத்தார். பல்வேறு விஷயங்கள் பற்றி உரையாடினோம். தனக்கு ஒரு கதை கூறும்படி கேட்டார். அது எப்போது தயாராக இருக்கிறதோ அப்போது என்னிடம் சொல்லுங்கள் என கூறினார். ஒரு நல்ல ஸ்கிரிப்ட் அவரிடம் கூறி அவரை இம்ப்ரெஸ் செய்ய விரும்புகிறேன். அவருடன் மிக விரைவில் ஒரு வித்யாசமான படத்திற்காக கூட்டணி சேரும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு விஜய்யுடன் சிவகாசி படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. விஜய் மற்றும் அஜித் இருவரையும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க வைக்க வெங்கட் பிரபுவால் தான் முடியும் என கடந்த பல வருடங்களாகவே ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ரசிகர்களின் அந்த ஆசை நிறைவேறுமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

வெங்கட் பிரபு தற்போது மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க, நெகடிவ் வேடத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் குரோனா முழு அடைப்பு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் அரசு கட்டுப்பாடுகளை விதிக்கத் துவங்கியதால் ஷுட்டிங்கை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு. அதற்கு பிறகு கடந்த மூன்று மாதங்களாகவே அரசு ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்க வில்லை. அதனால் மீண்டும் அனுமதி எப்போது கிடைக்கும் என படக்குழு காத்திருக்கிறது.

எதாவது புதிய படம் ரிலீஸ் ஆனால், அதை பார்த்து, அது தனக்கு பிடித்திருந்தால் உடனே அவர்களை நேரில் அழைத்து அல்லது போன் மூலமாகவோ பாராட்டு தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் விஜய். அவரது இந்த குணம் பற்றி வெங்கட் பிரபு தற்போது தெரிவித்துள்ள விஷயமும் வைரலாகி வருகிறது.
விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்து விட்டார். அதுவும் ரிலீசுக்கு தயாரான நிலையில் இருக்கிறது. ஆனால் ஏப்ரல் மாதம் ரிலீசாகி இருக்க வேண்டிய இந்த படம் கொரோனா முழு அடைப்பு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு தான் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.

அடுத்து விஜய் உடன் கூட்டணி சேர பல்வேறு முன்னணி இயக்குனர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். அடுத்து விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க உள்ள படத்தினை ஏ.ஆர். முருகதாஸ் தான் இயக்க உள்ளார் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் அந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளிவரவில்லை.

விஜய்யை இயக்க வேண்டும் என்ற வெங்கட் பிரபுவின் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே