படப்பிடிப்பு தளத்தில் தகராறு, பத்திரிக்கையாளரை தாக்க முயற்சி – விஜய் சேதுபதி படப்பிடிப்பு நிறுத்தம்

படக்குழுவினர் அவரை ஒருமையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்து, தாக்க முயற்சித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால், சிறிது நேரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

விஜய் சேதுபதியின் 46-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. இயக்குநர் பொன்ராம் இந்தப் படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைப்பெற்று வருகிறது.

முகக் கவசம் அணியாமல், கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல், பொதுமக்களுக்கு இடையூறு தரும் விதமாக படப்பிடிப்பு நடத்தப்படுவதாக தகவல் பரவியதை அடுத்து பிரபல ஆங்கில நளிதழின் புகைப்படக் கலைஞர் படமெடுக்க சென்றுள்ளார். அப்போது படக்குழுவினரில் சிலருக்கும் அங்கு சென்ற புகைப்பட கலைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், உச்சகட்டமாக படக்குழுவினர் அவரை ஒருமையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்து, தாக்க முயற்சித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைக் கண்டித்து சக பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட, சிறிது நேரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

பின்னர் விஜய் சேதுபதி சமரசம் செய்து வைக்க முயற்சித்தும், அதை ஏற்றுக் கொள்ளாத பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே கொரோனா விதிமுறைகளை மீறியதாக படக்குழுவினருக்கு மாநகராட்சி அதிகாரிகள் 5,000 ரூபாய் அபராதம் விதித்ததாகவும், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு முறையான அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே